பெண்கள் கிரிக்கெட்டை தடை செய்தால்… ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நேற்று முன்தினம் புதிய அரசின் விவரம் அறிவிக்கப்பட்டது.
தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலிபான் கலாச்சார கமி‌ஷன் துணைத்தலைவர் வாசிக் கூறும்போது, ‘ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’. அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.

இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தலிபான் தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகளாவிய அளவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமானது. கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை என்ன வென்றால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு விளையாட்டு. நாங்கள் எல்லா மட்டத்திலும் இந்த விளையாட்டை ஆதரிக்கிறோம்.

மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம். இதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.