மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரத்தில் 36 பேர் உயிரிழப்பு:மருத்துவர் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த 24 மணித்தியாலமான நேற்று வியாழக் கிழமை காலை 10 மணி வரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இருந்த போதும் தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி 92.41 வீதம் ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆகக் குறைந்தளவு தடுப்பூசி 8.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளது.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை வரை 27.33 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வீடுவீடாக இராணுவத்தினரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.