கேரள ஐஎஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமாவை விடுவித்த தலிபான்கள்

கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமா அவரையும் அவரது 5 வயது குழந்தையையும் இந்தியா அழைத்து வர வேண்டும் என கேரளாவில் உள்ள அவரது தாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளை விடுவித்து வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமாவையும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுடன் சேர்த்து தலிபான்கள் விடுவித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா இந்துவாக இருந்த அவர் பின்னர் மதம் மாறி தனது கணவருடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்தார். ஆப்கனில் இருந்த போது அவரது கணவர் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கைக்குழந்தையுடன் இருந்த பாத்திமா, 2019-ம் ஆண்டு ஏராளமான தீவிரவாதிகளுடன் ஆப்கன் படையினரிடம் சரணடைந்தார். அவரை சிறையில் அடைத்திருந்தனர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதும் தற்போது நிமிஷா பாத்திமா உள்ளிட்டோரை விடுவித்துள்ளனர்.

இந்தநிலையில் தனது மகள் நிமிஷா பாத்திமா மற்றும் அவரது மகளை இந்தியா அழைத்து வர வேண்டும் என அவரது தாய் பிந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனது மகள் நிமிஷாவையும், அவரது 5 வயது மகளையும் விடுவித்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றனர் என விவரம் தெரியவில்லை. அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும். எனது மகள் செய்த குற்றத்துக்கு இந்திய சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.