ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம்

எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு மாறானது என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர். கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இவ்வைரஸானது பரவியுள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் தற்போது சுதந்திரமாக சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிநபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து உள்ள நிலையில், உண்மையான தரவுகளை அரசாங்கம்,சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் என்பன மறைக்கின்றன.

சுகாதார அதிகாரிகளால் மாகாண மட்டத்தில் வெளியிடப்படும் தரவுகள் தேசிய தரவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. 25-30 % தரவுகளே வெளியிடப்படுகிறது.

அரசாங்கம் குறைந்தளவான கொரோனா நோயாளர்களை கையாளுவது இதிலிருந்து உறுதியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் பலவீனமானவை என்றும், வைரஸை கட்டுப்படுத்த உதவாது, இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு நேர ஊரடங்கு பொது மக்களுக்கு பொருத்தமற்றது.

மேலும் தடுப்பூசி திட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி திட்டத்தில் முன்னேற்றம் அடைவது கடினமான பணியாகும்.

கட்டுக்கதைகளைப் பின்பற்றி அரசாங்கம் நேரத்தை வீணடிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.