நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 344 பேரில் ஆகக்குறைந்தது 65 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

இந்தப்பின்னணியில் Dubbo உள்ளூராட்சி பகுதில் ஒருவார கால முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பரவலைக் கட்டுப்படுத்த உதவும்வகையில் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு NSW Premier Gladys Berejiklian வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland Parramatta, Campbelltown மற்றும் Georges River ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் பணியாளர்களில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமது உள்ளூராட்சி பகுதிகளைவிட்டு வெளியே செல்லமுடியும்.

மேற்குறிப்பிட்ட எட்டு உள்ளூராட்சி பகுதிகளுக்கு எவரையும் அநாவசியமாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை(அனுமதிபெற்றவர்கள் மாத்திரம்), பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 119,256 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஐவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் ஆறு பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Regional விக்டோரியாவில் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ள அதேநேரம் மெல்பன் பெருநகருக்கான முடக்கநிலை ஒருவாரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

விக்டேரிய மாநிலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 41,571 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குயின்ஸ்லாந்தில் புதிதாக நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் Cairns மற்றும் Yarrabah-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை இன்றுடன் முடிவுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.