தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கு சமன் பந்துலசேனவுக்கு பரிசு

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ ஜெனகவேவ கிராம பிரிவைச் சேர்ந்த 1417 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் குறைபட்ச வேதன திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இன விகிதாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. அதற்காகவே காணி அபகரிப்புகளும் சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப் படுகின்றன. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சலுகைகளுக்காக துணை போகின்றனர். இன அழைப்பை இவர்கள் மௌனிகளாக வேடிக்கை பார்க்கின்றனர். எனவே தமிழினம் அழிவதற்கு காரணமாகிவிட வேண்டாமென இவர்களிடம் வேண்டுகின்றேன்.

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ ஜனாகவேவ கிராம பிரிவைச் சேர்ந்த 1417 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே வடக்கில் தமிழ் இன விகிதாசாரத்துக்கு ஆபத்து ஏற்படப்போகின்றது.

இதேவேளை முல்லைத்தீவில் கோத்தபாய கடற்படை முகாமுக்கு 617ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.இதில் 339 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இருந்த காணிகள். இக்காணியை சுவீகரிக்கின்ற நில அளவைத் திணைக்களத்துக்கு எதிராக,கடற்படைக்கு எதிராக அண்மையில் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தியிருந்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் களாகிய நாமும் கலந்து கொண்டோம். அப்போது இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு கடற்படையிடம் கேட்டிருந்தோம். அது ஜனாதிபதியாக இருக்கலாம் ,பிரதமராக இருக்கலாம் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கலாம் என்றும் கூறியதுடன் இந்தக் காணிகளை மக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம்.

இந்த 617 ஏக்கர் காணிகளின் சுவீகரிப்புக்கு கடற்படைக்கு என்ன தேவை இருக்கின் றது. இந்த 617 ஏக்கர் காணியை அபகரிப்பதன் பிரதான நோக்கம் எதிர்காலத்தில் அந்தக் கடற்படையைச் சார்ந்த குடும்பங்களை அங்கு குடியேற்றி தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைக் குறைப்பதுதான். முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் நடைபெற்றதன் பின்னர் பல நிலங்கள் இராணுவ வசமாகியுள்ளன. எனவே இவற்றை விடுவிக்க உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.