’என் சாவுக்கு காரணம்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார்.

ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த அந்த சொற்களின் அர்த்தம்  ‘என் சாவுக்கு காரணம்’ என்பதாகும் என, அவர் கூறினார்.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதற்காக ஹிஷாலினி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய அப்பியாச கொப்பிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிககாட்டினார்.