‘கிண்ணியாவில் எல்லைகள் ஒடுங்கும் அபாயம்’

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று (02) கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“கிண்ணியா பிரதேசம் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பகுதியாகும். திருகோணமலை மாவட்டத்தில் சனஅடர்த்தி கூடிய பகுதியாகவும் கிண்ணியா காணப்படுகிறது. இதன் எல்லையைக் குறைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

“இதுவரைக்கும் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட எல்லைகள் சரிவர இடப்படாத காரணத்தால், நாளுக்கு நாள் பரப்பளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“மறுபுறம் மணல் அகழ்வும் கடலரிப்பும் பரப்பளவைக் குறைத்து வருகிறது. இது சம்பந்தமாக கிண்ணியாவில் உள்ள பாராளுமன்ற  உறுப்பினர்களும்  பிரதேச செயலாளரும் இணைந்து, இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“என்றார்.