செல்வச்சந்நிதி திருவிழாவுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்; 100 பேருக்கு மாத்திரம் அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் உள்ளிட்டோரின் பங்களிப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இந்த ஆண்டு பெருந்திருவிழாவை நடத்துவதற்கு அனுமதியில்லை.

ஆலய உள் வீதியில் மட்டுமே வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வு களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறப்பு தனியார், அரச பேருந்துகள் சேவைகள் ஈடுபட அனுமதியில்லை என்பதுடன் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயச் சுற்றாடலில் வீதிகளில் மண்டகப்படி வைத்தல், பிரசாதம் வைத்தல், தாக சாந்தி, அன்னதானம் வழங்கல் என்பனவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையில் அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், காவடி – தூக்குக் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களின்போது கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறை களை முறையாகக் கடைப்பிடிக்காத நிலை காணப்படுவதால் மேற்படி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயச் சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆலயச் சூழலில் இயங்கி வந்த கடைகள் மாத்திரமே தொடர்ந்தும் இயங்கிவர அனுமதிக்கப்படும். எனினும் இயங்கி வரும் கடைகளை விரிவாக்க அனுமதியில்லை.

ஆலயச் சூழலிலுள்ள வெற்றுக் காணிகளிலோ அல்லது கட்டடங்களிலோ கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதுடன் நடமாடும் வியாபாரமும் அனுமதிக்கப்படாது.

இந்த ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்கள பாலத்துடனான போக்குவரத்து இடம்பெறாது.

ஆலய வழிபாடுகளின்போது ஆலயச் சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அடியவர்கள் நீண்ட நேரம் ஆலயத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

போக்குவரத்துப் பாதைகள் தடைப்படுத்தப்படும் போது பிரயாணிகள் மாற்றுவழிப் பாதையைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமை, மீறியமை போன்றவற் றால் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

சுகாதார அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் சுகாதார சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற் றுடன் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் கூறப்பட்ட சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை செல்வச்சந்திநிதி ஆலய வழிபாட்டுக் காலங்களில் ஆலயச் சுற்றாடல்களில் அடியார்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.