யாழில் அரச அலுவலகம் ஒன்றில் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம்பெண் உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் ஒரு தலைக் காதலினாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் தெரியவருகிறது.

அலுவலகத்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, மலசலகூடத்துக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டு அந்த உத்தியோகத்தர் இருந்து விட்டார்.

அலுவலக ஊழியர்கள், காயப்பட்ட பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தப் பகுதியால் சிவில் உடையில் வந்த காவல் துறை  சம்பவத்தை அறிந்து, அங்கு சென்றனர்.

மலசலகூடத்தில் மறைந்திருந்தவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். எனினும், உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வராததால் காவல் துறை கைத்தொலைபேசி கமரா மூலம் உள்ளே நடப்பதை படம் பிடித்த போது, உள்ளே அந்த நபர் இரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பது தெரிய வந்தது.

உடனே கதவை உடைத்து அவரை மீட்டு அலுவலக வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

குறித்த நபர் கத்தியால் தனது வயிற்றை குத்திக் கிழித்துள்ளார்.

இரண்டு சம்பவங்களுக்கும் வேறு வேறு கத்திகளையே பாவித்துள்ளார்.

பின்னர் காவல் துறை  மேற்கொண்ட விசாரணையில் ஒரு தலைக் காதலால் இந்த விபரீதம் நடந்தது தெரியவந்தது.

மானிப்பாயைச் சேர்ந்த அந்தப் பெண் உத்தியோகத்தர் விவாகரத்தானவர்.

அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பருத்தித்துறை,புலோலியைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருதலையாக காதலித்துள்ளார். பெண் உத்தியோகத்தருக்கு இதனால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், இரண்டு வாரங்களின் முன்னர் மானிப்பாய் காவல் துறை  நிலையத்தில் அந்தப் பெண் முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளார். மானிப்பாய் காவல் துறை இளைஞரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையிலேயே நேற்று அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இளைஞரின் மேசை லாச்சிக்குள் இருந்து இன்னும் இரண்டு கத்திகளும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் குற்ற தடுப்புப் பிரிவு காவல் துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.