NSW-இல் புதிதாக 177 பேருக்கு தொற்று! முடக்கநிலை மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளார்.

90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது மேலும் 4 வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்களுக்கான முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejikilian தெரிவித்தார்.

மேலும் இப்பகுதிகளில் வாழ்பவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தமது உள்ளூராட்சி பகுதிக்குள் மட்டுமே பயணம்செய்ய முடியும். ஏதேனும் பொருட்களை அந்த உள்ளூராட்சி பகுதிக்குள் பெறமுடியாதபட்சத்தில் மாத்திரம் தமது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் பயணம்செய்ய முடியும்.

அதேநேரம் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown  மற்றும் Cumberland  ஆகிய  உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் பணியாளர்களில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமது உள்ளூராட்சி பகுதிகளைவிட்டு வெளயே செல்லமுடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள பின்னணியில் தற்போது Parramatta, Campbelltown மற்றும் Georges River பகுதிகளுக்கும் இக்கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் மாநில Premier Gladys Berejikilian கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 177 பேரில் 74 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 103 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இவர்களில் ஆகக்குறைந்தது 46 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 94,532 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம்  வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 8 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றையநபர் Moonee Valley racecourse drive-through testing centre-இல் பணிபுரிந்தவர் எனவும் இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் மாநில சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் 35,862 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.

விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட  முடக்கநிலை  நீக்கப்பட்டு பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவந்துள்ளன:

  • வீடுகளில் விருந்தினர்களுக்கு அனுமதியில்லை. இக்கட்டுப்பாடு ஆகக்குறைந்தது இன்னும் இருவாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • வெளியரங்குகளிலும் உள்ளரங்குகளிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • 4 சதுரமீட்டர்களுக்கு ஒரு நபர் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வணிகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், உணவகங்கள், Live music venues, dance classes மீண்டும் இயங்க ஆரம்பிக்கலாம்.
  • வெளியிடங்களில் 10 பேர் வரை மட்டுமே ஒன்றுகூட முடியும்.
  • பள்ளிகள் மீண்டும் நேரடி கற்றல் செயற்பாட்டிற்கு மாறலாம்.

இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனிலுள்ள விடுதியொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வெளியேறிய நபர் ஒருவருக்கே தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர் நோய்த்தொற்றுடன் சுமார் 6 நாட்கள் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.