நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 112 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 112 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக தொற்றுக்காண்போர் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டிருந்த பின்னணியில், ஒரே நாளில் 112 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவல் ஆரம்பித்ததையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நால்வருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

கடந்த 24 மணிநேரத்தில் 46,478 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.