‘நானே வருவேன்’ படத்தலைப்பு மாற்றம்?

தனுஷ் நடிக்கவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பை மாற்றப் படக்குழு முடிவு செய்துள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படம், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.

இதில் செல்வராகவன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் தொடங்கப்படவுள்ளது. இதனிடையே, ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பை மாற்றப் படக்குழு முடிவு செய்துள்ளது. கதைக்கு ஏற்றவகையில் கமர்ஷியலாகத் தலைப்பை வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

விரைவில் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.