விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த இளைஞர் கைது

விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் குற்றங்களைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகராசா பிரபா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 27 1/2 அங்குல நீளமும் 11/4 அங்குல அகலமும் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்றை வைத்திருந்ததாகவும் சிம் அட்டைகளுடன் கூடிய இரு கைத்தொலைபேசிகளை வைத்திருந்ததாகவும் விஷேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சந்தேக நபர் இரும்பு வாளை மறைத்து வைத்திருந்ததாகவும், அப்பகுதி இளைஞர்களை குற்றங்களைச் செய்ய தூண்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.