எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களில் எனது பங்களிப்பு காரணமாக அமைச்சர்கள் என்னையும் எனது குடும்பத்தவர்களையும் தாக்குவார்கள் என அச்சமடைந்துள்ளேன் என அசேலசம்பத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தொடர்பான விபரங்களை பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை என குறிப்பிட்டுள்ள அசேலசம்பத் தற்போது ஆள்கடத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன போ உணர்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது மற்றும் தனது குடும்பத்தவர்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் வெளிநாட்டு தூதரகங்களின் முன்னாள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அசேலசம்பத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இது தொடர்பில் கடிதமொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கதலைவருக்கு நடந்தது எனக்கும் நடப்பதற்கு அனுமதிக்கவேண்டாம் என ஜனாதிபதி பிரதமர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் கோரவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் 25ம் திகதி இரவு நான் வீட்டிலிருந்தேன், ஜனாதிபதியின் உரையை அவதானிப்பதற்காக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் அவ்வேளை .25 மணியளவில் 20 பேருடன் வெள்ளை வான் எனது வீட்டிற்கு வந்தது,சிலர் சிஐடி அடையாள அட்டையை காண்பித்தனர், பின்னர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை முற்றாக மீறி என்னை தாக்கி வானிற்குள் இழுத்துச்சென்றனர்- அவர்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை அவர்களிடம் பிடியாணையும் இருக்கவில்லை என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சிஐடி உத்தியோகத்தர்கள் என்னை மோசமாக நடத்தினார்கள்,எனது வீட்டிற்கு வந்த சிஐடியினர் எவரும் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை, எனக்கு கொரோனா பரவினால் யார் பொறுப்பு ஏன் சிஐடியினர் இரவில் வருகின்றனர் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.