எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி மாதம்

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும், அழுத்தங்களாலும், எமது மக்களின் நீதிக்கான பயணம் தடைப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வுச் செயற்பாடொன்றின் அவசியம் உணரப்பட்டது.

அதன் காரணமாகத்தான் கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மண்ணில் எழுக தமிழ் பேரணி நடாத்தப்பட்டது. எனவே மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்து, அதற்குத் தீர்வுகாணும் ‘எழுக தமிழ் பேரணியை’ எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.