சிறிலங்கா ஜனாதிபதியின் உரையை அவரே நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டார்: குமார் வெல்கம

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ; உரையாற்றுவதாக கூறி இறுதியாக மோசமான விமர்சனத்தை அவரே உருவாக்கிக்கொண்டு அவரது உரையை நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

தகுதி இல்லாத தலைமைத்துவத்தை நியமித்ததால், இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதேச சபைக்கு கூட போகாத ஒரு நபரை நாட்டின் தலைவராக்க வேண்டாம் என ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே நான் தெரிவித்து வந்தேன். அவ்வாறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும். இராணுவத்தை இயக்குவது போன்று நாட்டை இயக்க முடியாது என பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளேன். இன்று அதுவே இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியின் உரையின் போது அவர் நாட்டு மக்களுக்கு கூறிய விடயம் என்ன, அவரது உரையாடலில் ஏற்பட்டுள்ள பயன் என்ன?

எரிபொருள் விலை உயர்வுக்கு அவரது உரை எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுத்தது? கொவிட் பிரச்சினைக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது? நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது பெரிய விடயம் அல்ல. தகுதி இல்லாத தலைமைத்துவத்தை நியமித்ததால் இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தின் தவறான சர்வாதிகார தீர்மானங்களே இந்த நாட்டை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையை உருவாகியுள்ளது. இதுவரை காலமாக நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு ஆட்சி செய்தவர்கள் நாட்டை சரியாக வழிநடத்தவில்லை. இப்போது ஜனாதிபதி கோட்டாபயவும் ‘பெயில்’ ஆகியுள்ளார்

எனவே நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.