கொரோனாவால் யாழில் மேலும் ஐவர் பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்பட்டன.

மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.அதன்படி வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

மூவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல் களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்படவுள்ளன.