தாமதமாகும் ‘பொன்னியின் செல்வன்’- நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரம்

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரமாகி உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதர காட்சிகளின் படப்பிடிப்பை அரங்குகளில் இல்லாமல் வெளிப்புறங்களில் நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் வெளிப்புறப் படப்பிடிப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை எனப் படக்குழு தீர்மானித்துள்ளது.

இதனால், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி உள்ளிட்ட முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள், மற்ற படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்கவுள்ளார் ஜெயம் ரவி. இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும், மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்’ படப்பிடிப்பும் சென்னையில் ஜூலையில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது படக்குழு.