அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறி

ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.

வடக்கில்; நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள் நிலவுகின்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு பயிற்சியில் யாழ் மாவட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் தென்இலங்கையில் இருந்து 7 பேரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய ஒரு பயிற்சியை ஏற்பாடு செய்து தருமாறு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்அவுஸ்திரேலிய இயற்கை வளங்கள் மற்றும் கனிமத் திணைக்களத்தின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதன் அடிப்படையில் இப்பயிற்சியை ஒழுங்கு செய்துள்ள சர்வதேச நீர் ஆராய்ச்சிமையம் யாழ் மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடமும் தென்இலங்கைக்கான ஒருங்கிணைப்பை கொழும்பில் இயங்கும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி எச்.மந்திரி திலகே என்பவரிமும் ஒப்படைத்திருந்தது.

விவசாய அமைச்சின் சார்பில் முன்னாள் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரும் தற்போதைய பிரதிப் பிரதம செயலாளருமான எந்திரி சோ.சண்முகானந்தன், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் ச.சர்வராஜா, கை.பிரகாஷ், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா ஆகியோருடன் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், கலாநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்ருந்து இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன்,புவியியல் துறையைச் சேர்ந்த கலாநிதி லோறீன் இராஜசூரியர் ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் நீர் தொடர்பான ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர்கள்.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நீர் முகாமைத்துவம் தொடர்பான இப்பயிற்சிநெறி எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

unnamed-11-4-600x360