அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷி கண்ணா, சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சமீபத்திய பேட்டியில் சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது. ஆனாலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும்.

அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைமைதான் இருந்தது. இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது”. இவ்வாறு ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.