சம்பந்தனை மீண்டும் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ …..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது ஈற்றில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்தச் செய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.

சிறிலங்கா  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு தினத்தில் சந்திப்பை நடத்துவதற்கே எண்ணங்கொண்டிருப்பதாகவும் அதற்கான திகதியை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருக்கின்றார்.

அத்துடன், முதலாவது சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறவிலலை என்றும் அதனையிட்டு எதிர்மறையாக கருதவேண்டாம் என்றும் குறித்த இணைப்பாளர் சம்பந்தனை கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  சிறிலங்கா  ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்தானமை தொடர்பில் எவ்விதமான எதிர்மறையான வெளிப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.