இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவில் கைது

 

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் ; 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது

இதைத்தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து பொலிஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் இங்கிலாந்து கடவுச்சீட்டு மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்திருந்துள்ளார்.

விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பது தெரியவந்தது
இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார்.

அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்து உள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு செல்வதற்காக கடற்கரையில் நின்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் இருந்து உள்ளார். பின்னர் ; பிணையில் வெளியில் வந்து உள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி நீதிமன்றில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.