திருகோணமலையில் உணவின்றி பட்டினியால் சாகக்கூடிய நிலை

திருகோணமலை – வரோதய நகர், புதுக்குடியிருப்பு மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது கிராமத்தில் விறகு வெட்டுதல் மற்றும் கூலித்தொழில் செய்தல் போன்றவற்றை பிரதான தொழிலாக மேற்கொண்டு வந்த நிலையில் ,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  உண்பதற்கு உணவின்றி தவிர்ப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளியே செல்வதை அடை செய்திருந்த போதிலும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்வதற்கு கூட வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு நாளைக்கு ஒரு நேரம் சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக பயணத்தடை  அமுலில் இருக்கும் பட்சத்தில் அன்றாட கூலி தொழில் செய்பவர்களுக்கு பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் புதுக்குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை அரசாங்கத்தினல் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதாத நிலையில் உள்ளதாகவும் ,தமது கூலி தொழில்களை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் இல்லாவிட்டால் பட்டினியால் சாக கூடிய நிலை ஏற்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.