தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாடு!

தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது.

இம்மாநாடானது கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி நடாத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி தென்னிலங்கையில் ஏற்படுத்திய அதிருப்தியை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே நடாத்தப்படவுள்ளது என தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு கடந்த 24.09.2016 இல் ‘எழுக தமிழ்’ என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்கு கிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப்பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே.

இப் பேரணியானது தென் பகுதியில் உள்ள குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருப்பதால் ‘எழுக தமிழ்’ பேரணியில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளையும், தேவைப்பாடுகளையும் தென் பகுதியில் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்துவதும் சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் ஆரோக்கியமானதொரு உறவைப் பேணுவதும் எமது கடைமையாகும்.

அந்த அடிப்படையில் நாங்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர் மாநாடொன்றை கொழும்பு – 07 ரொறிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் எதிர்வரும் 22.11.2016 பிற்பகல் 04.00 மணி தொடக்கம் 06.00 மணிவரை நடாத்தவுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.