உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது) ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்றே இருக்கும். அதாவது பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும் ஆகும். இவை எல்லாம் நியூசிலாந்துக்கு பழக்கப்பட்டது என்பதால் அவர்களால் எந்தவித தடுமாற்றமும் இன்றி பந்து வீச முடியும். இதன் அடிப்படையில் பார்த்தால் நியூசிலாந்துக்கே சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை நன்றாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கு ஸ்விங் பந்துவீச்சு தான் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. எனவே எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ, அந்த அணியே கோப்பையைக் கைப்பற்றும்.

நியூசிலாந்தின் வில்லியம்சன் இயல்பான ஒரு கேப்டன். மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு மிக்கவர். பொறுமைசாலி. தேவைப்படும் போது தாக்குதல் பாணியை கையில் எடுப்பார். இதற்கு நேர் எதிரானவர் இந்திய கேப்டன் விராட்-கோலி. எப்போதும் அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். வெவ்வேறு அணுகுமுறையை கொண்ட இவர்களில் யாருடைய கை ஓங்கப் போகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்தார்.