காங்கோவில் எரிமலை பெரிய அளவில் வெடிக்கும் அபாயம்

எரிமலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா காங்கோ எரிமலை உள்ளது.

5 நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறி அருகில் உள்ள கோமா நகருக்குள் புகுந்தது.

அதில் லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 32 பேர் பலியானார்கள். 172 குழந்தைகள் உட்பட பலரை காணவில்லை. அவர்களிலும் பலர் எரிமலைக் குழம்புக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எரிமலை பாதிப்பால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் எரிமலைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே கோமா நகரின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி காங்கோ அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நகரில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

அவர்களில் லட்சக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அவர்களை வாகனங்களில் ஏற்றி 20 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு கொண்டு விடுகிறார்கள்.

கோப்புபடம்பலர் ருவாண்டா நாட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். கடந்த தடவை எரிமலைக் குழம்புகள் ஊருக்குள் புகுந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அலறியடித்து ஓடினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலிலும் பலர் உயிரிழந்தனர். அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.