இலங்கை நாளை இரவு முதல் 3 தினங்கள் முடங்குகிறது!

நாட்டிலுள்ள கொவிட் ; நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை ; இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சுகயீனம் அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தவிர வேறு எந்தவொரு காரணிக்காகவும் யாரும் அநாவசியமாக நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமையவே வெளியில் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம் , நீர் , மின்சாரம் , தொடர்பாடல் , ஊடகம் , துறைமுகம் , விமான நிலையம், தனியார் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள் , பணிக்குச் செல்ல முடியும். அதனை உறுதிப்படுத்துவதற்காக தொழில் அடையாள அட்டை அல்லது ஆவணம் அவர்கள் வசமிருக்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.