சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி கோரப்பட்ட வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கோரிக்கை விடுக, வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொரோனா அலை உருவெடுத்துள்ள நிலையில் இலங்கை அரசினால் ; முடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆ.ர் பரிசோதனை முடிவுகளை பல நாட்கள் கடந்தும் வழங்க முடியாது சுகாதாரத் துறையினர் திண்டாடுகின்றனர்

இப்பிரதேசங்களில் பொது மக்களுக்கான தடுப்பூசிகளை அரசு இன்னமும் வழங்கியிருக்கவுமில்லை. இவ்வாறு தொற்று அதிகரித்துள்ள தாயகப் பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை தேவைக்கேற்ப வழங்காது தொற்றாளர்கள் அனைத்து இடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது நடமாடும் அபாய நிலையை அரசு வேண்டுமென்றே தமிழர் தாயகப்பிரதேசங்களில் தோற்றுவித்துள்ளதா, முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை இலங்கை அரசு கொரோனா பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இன்றைய நெருக்கடியான சூழலிலும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூர்வதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் மனிதப் பேரவலத்தை உலகறியச்செய்வதும் அடுத்த தலைமுறைகளுக்கு அதனைக் கடத்துவதும் எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள அரசு, கொரோனா தொற்றிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க விசேட அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே கொரோனா ; பேரழிவுத் தொற்று ; வேகமாக பரவி வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைமையாய் எமது மக்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து  கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதி நாளான 18 ஆம் திகதி பொது இடங்களிலும், இல்லங்களிலும் ஒன்றுசேர்வதைத் ஒன்று கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியைப் பேணியவாறு ; ஒவ்வொருவரும் தனித்தனியாக விளக்கேற்றியும் ; அஞ்சலிக்குமாறு கோருகின்றோம்.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த பட்டினிச் சாவை நினைவு கொள்ளும் வகையில் கஞ்சியினை பரிமாறி ; முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூரும் இவ்வரலாற்றுக் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு எமது மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

ஓரிடத்தில் ஒன்று கூடி நினைவேந்துவதே எமது கூட்டுரிமையாகும். எனினும் இம்முறை கொரோனா ஆபத்து நிலையில் ஓரிடத்தில் ஒன்று கூடுவதிலுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு தனித்தனியாக நினைவேந்தலை மேற்கொண்டாலும், இந்நினைவு கூரல் நிகழ்வுகள் மூலமான ; கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக அவற்றை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்