யாழில் 35 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொவிட்-19 தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் வவுனியா மாவட்ட வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும், பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 19 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 14 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும் என 35 பேருக் குக் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப் படுத்தல் விடுதியில் சேர்க்கப் பட்ட 6 பேருக்கும் , பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், தெல்லிப்பழை வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கும், வேலணை பிரதேச சுகாதார மருத்துவப் பிரிவில் ஒருவருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா இருவருக்கும் எனத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.