அவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த ஈழத்து இளைஞர் மரணம்

ஈழத்திலிருந்து  புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்து, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுஅவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்தார்.

சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே அவர் திடீர் மரணமடைவதற்குக் காரணம் எனவும் அவரது நண்பர் நிமல் SBS தமிழிடம் தெரிவித்தார்.

நேற்றையதினம் அஜிதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்துகின்றனர்.

இதேவேளை அஜிதனின் உறவினர்கள் யாரும் ஆஸ்திரேலியாவில் இல்லாத நிலையில் ,அவரது உடலை இலங்கைக்கு கொண்டுசெல்வதா அல்லது அவரது உறவினர்களை இங்கு வரவழைப்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிமல் தெரிவித்தார்.

‘மெராக்’ கப்பலில் வந்து,பல சிரமங்களுக்கு மத்தியில் நிரந்தர வதிவிடம் வழங்கப்பட்டு, 2013ம் ஆண்டு அஜிதன் ஆஸ்திரேலியாவில் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.