ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி குறிப்பிட்டிருக்கிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் ஆஸ்திரேலியாவை அடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு ஆஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் சுமார் 3 ஆண்டுக்காலம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Baxter தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

இவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அரசு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களை நிர்வகித்த வந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது தற்போது ஈரானிய அகதியான Payam Saadat வழக்குத் தொடுத்திருக்கிறார். அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டத்தில் முக்கியமானதாக அணுகப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு, ஈரானிய அகதிக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் மேலும் பல அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் எனக் கருதப்படுகின்றது.

ஈரானிய அகதி தொடர்ந்த வழக்கின் விசாரணை அடுத்த 12 வாரங்களுக்கு நடைபெறும் என எண்ணப்படுகின்றது.

“நாங்கள் மிகுந்த கவலையுடன் இருந்தோம். மோசமான உடல்நிலையுடன் இருந்தோம். எதாவது நல்லது நடக்கும் என்ற வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் Paayam Sadaat எனும் ஈரானிய அகதி.

இவ்வாறு சுரங்கப்பாதைத் தோண்டி தப்புவது கடுமையானது என்பதை அறிந்திருந்தாகக் கூறும் ஈரானிய அகதி, நாங்கள் எதிர்கொண்ட மோசமான நிலை மற்றும் வலிக் காரணமாகவே இவ்வாறு செய்தோம் எனக் கூறியிருக்கிறார்.