ட்ரோன்களை சிறிலங்காவுக்கு ஆஸ்திரேலியா! -தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்

இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கிய ஆட்கடத்தலை செயல்களை கண்காணிக்கும் விதமாக 5 கண்காணிப்பு ட்ரோன்களை சிறிலங்காவுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கியிருந்தது.

சட்டவிரோத படகுப்பயணம் மற்றும் ஆட்கடத்தல் செயல்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இலங்கைக்கு இந்த ட்ரோன்களை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஆட்கடத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், இயற்கை பேரழிவின் போது மீட்புப் பணிகளுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஆஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக வேலைச் செய்வதன் மூலம், ஆஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் படகுப் பயண முயற்சியில் ஒருபோதும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளால் வெற்றியடைய முடியாது என்னும் எச்சரிக்கை செய்தியை விடுக்கிறோம்,” எனக் கூறியிருந்தார் ஆஸ்திரேலியாவின் Joint Agency Task Force- யின் தளபதி மார்க் ஹில்.

இந்த ட்ரோன்கள் ஆட்கடத்தல் செயல்களை கண்டறிவதற்கும் சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவக்கூடியவை என ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் மூத்த அதிகாரி ராப் வில்சன் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.