இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் முகேஷ் அம்பானி

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர்.

2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததால், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
கவுதம் அதானி
எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன்  3-ம் இடத்திலும், அவன்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4-ம் இடத்திலும் உள்ளனர்.
கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5-ம் இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து லட்சுமி மிட்டல், குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷாங்க்வி, சுனில் மிட்டல் & குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
கடந்த ஆண்டு 102ல் இருந்த மொத்த இந்திய கோடீசுவரர்களின்  எண்ணிக்கை இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
முதல் பத்து இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில்  இரண்டு இந்தியர்கள் சுகாதாரத் துறையில் முதலீடுகள் காரணமாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (எஸ்ஐஐ) சைரஸ் பூனவல்லா மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் திலீப் ஷாங்க்வி ஆகியோர் ஆவார்கள். கடந்த ஆண்டு போர்ப்ஸ் தகவலின்படி 12-வது இடத்தில் இருந்த பார்மா அதிபர் திலீப் ஷாங்க்வி இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள்  மீண்டும் வந்தார்.