தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“எந்த நாட்டு குடியுரிமைக் கொண்டவர்? விசா நிலை என்ன? என்பதையெல்லாம் கடந்து அனைத்து அகதிகளுக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,” என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் Omar Khorshid தெரிவித்திருக்கிறார்.

“தஞ்சக்கோரிக்கையாளர்களையும் அகதிகளையும் தடுத்து வைத்திருப்பது ஆஸ்திரேலியர்களின் வரிப்பணத்தை பெருமளவில் செலவழிக்கச் செய்கிறது. அதே சமயம், மனநல மருத்துவத்தைப் பெறுவதற்கான வழிகள் மிகவும் குறைவாக உள்ளதால் அதனால் ஏற்படும் தீங்கும் மேலும் மோசமான உடல்நலப் பாதிப்புகளை (அகதிகளுக்கு) ஏற்படுத்தும். இதை பொருளாதார மற்றும் கொள்கை ரீதியிலான பார்வையில் கண்டாலும் இந்த அணுகுமுறை சரியானதாக இருக்காது,” Omar Khorshid குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் ஆஸ்திரேலிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகள்:

*தடுப்பிற்கான மாற்று இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்

*தடுப்பிலிருந்து சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு/ தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்

*கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கப்பட வேண்டும்.