‘தள்ளிப்போகாதே’ பாடலை கண்டு ரசித்த ஏ.ஆர்.ரகுமான்

அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்றுள்ள ‘தள்ளிப்போகாதே’ பாடலை ரசிகர்களுடன் ஏ.ஆர்.ரகுமான் கண்டுகளித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளிவந்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கௌதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அந்த எதிர்பார்ப்புகளையும் இந்த படம் ஓரளவுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம். வசூலிலும் இப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மிகவும் ஹிட்டான ‘தள்ளிப்போகாதே’ பாடலுக்கு ரசிகர்கள் எந்தளவுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையரங்குக்கு சென்று ரசிகர்களோடு சேர்ந்து கண்டுகளித்துள்ளார்.

இதற்காக சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான், படம் திரையிடப்பட்ட அரங்கின் உள்ளே உள்ள படிக்கட்டிலேயே நின்றுகொண்டு அந்த பாடலை காட்சிப்படுத்திய விதத்தை கண்டு ரசித்தார். அந்த பாடல் முடிவடைந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஏ.ஆர்.ரகுமான் இதுவரை தான் ரசித்த எந்த நடிகரின் படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்தது கிடையாதாம். இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.