நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்!

பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக,  நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் நேற்று மார்ச் 18இல் காலமானார்.

போராட்டம் சம்பந்தமான செய்திகளையும் தகவல்களையும் மக்களிடம் உடனுக்குடன் கொண்டு போய்ச்  சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அதன் ஆரம்பகர்த்தாவாக கேணல் கிட்டுவின் வழிநடாத்தலில் பெரும் பங்காற்றியவர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படப் பிரிவு, ஆவணப் பிரிவு, குறும்படம், விடுதலைப் பாடல் ஒலிப்பதிவு, ஒலிநாடா வெளியீடு, புலிகளின் குரல் வானொலி, நிதர்சனம் தொலைக்காட்சி என அத்தனை வரலாற்று சாதனைகளின் நாயகன்.  நவீன தொழில்நுடபத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலி, தொலைக்காட்சி மிளிர்ந்தமைக்கு காரணமானவர்.

லண்டனில் மூன்றாவது கண் என்ற ஊடக நிறுவனத்தை நடாத்தி வந்தவர். தேசியத் தலைவரின் பெருமதிப்புக்குரியவரும் போராட்டகால ஊடக செயல்வீரருமான பரதன் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாரினதும் நண்பர்களதும் துயரில்  பங்குகொள்கின்றோம்.