எகிப்து கல்லறையில் 2500 வயது மம்மி கண்டுபிடிப்பு

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வண்ணமயமான மம்மி, எகிப்து நாட்டின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன.

எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.

இந்நிலையில், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி, எகிப்து நாட்டின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மம்மி கி.மு. 1075 – 664 வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு எகிப்தின் லஸோர் நகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி மிகவும் நல்ல நிலையில் உள்ளது.

கெய்ரோவில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் நைல் நதியின் மேற்கு கரையில் இந்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மம்மியானது மிகவும் அழகாக வண்ணமிடப்பட்டு இருந்தது.