தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள்

இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ; இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம் பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம். வடக்கு கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்துகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைவடைந்து செல்கின்றமையை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

இது எமது இனத்திற்கு ஆபத்தானது.  ஆரம்பத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் 11 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தார்கள் ஆனால் தற்போது 7 பாராளுமன்ற ; உறுப்பினர்களே உள்ளனர். தமிம் மக்களின் சனத் தொகை குறைவடைந்ததன் விளைவே இது எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாக இல்லை எனவும், குறிப்பிட்டார்.

தமிழ்த் தலைமைகள் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவைத்தை இப்படியாக ஒரு இனத்தின் ஆபத்தான பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை எனவும், தமிழ் மக்களின் சனத் தொகையானது இப்படியே சென்றால் வென்றெடுக்கும் உரிமைகளை அனுபவிக்க மக்கள் இருப்பார்களா என்ற கேள்வியே எழுகிறது என்றார்.

எனவே தமிழினத்தின் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, தவறின் 2028 இல் முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள். இது 2031 ஆம் ஆண்டின் சனத் தொகை மதிப்பீட்டில் புலப்படும் எனத் தெரிவித்த அவர், ; இலங்கையின் சனத்தொகை பெருக்க வீதத்தில் முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கு அடுத்தப்படியாகவே தமிழர்கள் காணப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.