சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘அமலா’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட “அமலா” திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இப்படம் திரையிடப்பட்ட போது, சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அமலா படக்குழு
சர்வதேச திரைப்பட விழாவில்  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான  ஸ்ரீகாந்த், அப்பாணி  சரத், அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பல நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை முஷினா  நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இதற்கு, லிஜின் பொம்மினோ இசையமைத்துள்ளார்.