வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ்

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 244 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவோர் சுயதனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறே பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு நேற்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பியவர்கள்.

இந்த இறுதிச் சடங்கில் பங்குபற்றிய சிலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 241 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் மாந்தை மேற்கில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 24 பேருக்கு தொற்றுள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் இவர்கள் நால்வரும் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பண்ணாகத்தில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது குடும்பத்தில் வயோதிபப் பெண்ணுக்கும் மாணவனுக்கும் தொற்றுள்ளமை கடந்த 27 ஆம் திகதி கண்டறியப்பட்டது.

அச்சுவேலி வியாபாரியின் குடும்பத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் மேலும் ஒருவருக்கு தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.