என் தோல்விக்குப் புலனாய்வுப் பிரிவே காரணம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு, மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி காரணமெனத் ஹிலரி கிளிண்ட்டன் குறைகூறியிருக்கிறார்.

மின்னஞ்சல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணையை மீண்டும் தொடங்கியது தமது வெற்றியைப் பாதித்ததாகச் சொன்னார் அவர்.

ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்த திருமதி ஹிலரி, நேற்றைய சந்திப்பு ஒன்றில் அது குறித்துப் பேசினார். தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு,  ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரம் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கியது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திருமதி ஹிலரி முன்னணி வகித்தார். எனினும் தேர்தலில் அவர் வெற்றிபெறவில்லை.

இதற்கிடையே, நியூயார்க், சிக்காகோ, லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராகவிருக்கும்  டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராய் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.