ஆஸ்திரேலிய ஓபனில் அசத்திய ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் தரநிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்சை நடத்தினர்.
ஒசாகா அரையிறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அத்துடன், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறி, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டம் வென்றதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஒசாகா
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் துவக்கம் முதலே அதிரடியான சர்வீஸ்களை அடித்து, ஜெனிபரை திணறடித்தார். இறுதியில் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார் ஒசாகா. இதன்மூலம் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார். இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.