இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா, ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா (வயது 34) போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிஎப்) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் அரோரா அகாங்ஷா, இந்த மாதமே தனது பிரசாரத்தையும், ஆதரவு திரட்டும் பணியையும் தொடங்கி உள்ளார்.
அரோரா பார் செக்ரட்டரி ஜெனரல் என்னும் ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ள அரோரா, இரண்டரை நிமிட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அவரது பிரசார வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அந்த காணொளியில் பேசும் அவர், “75 ஆண்டுகளாக, ஐ.நா உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவி மிகக் குறைவு மற்றும் தொழில்நுட்பமும் புதுமையும் பின்னடைவில் உள்ளது” என கூறி உள்ளார்.
‘இவ்வளவு தான் ஐ.நா. செய்யமுடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்கு இதை விட சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஐ.நா. தேவை. அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன்” என்கிறார் அரோரா.
அரோரா அகாங்ஷா இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.நா.வின் முதல் பெண் பொதுச்செயலாளராக முத்திரை பதிப்பார்.
Eelamurasu Australia Online News Portal