ஆஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்: அவர்களது எதிர்காலம் என்னவாகும்?

ஆஸ்திரேலிய கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இணைப்பு விசா என்பது தற்காலிகமானது என்பதால், குறிப்பிட்ட அகதியின் பாதுகாப்பு விசா பரிசீலிக்கும்படி வரும் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்பு விசா புதுப்பிக்க வேண்டிய சூழல் நிலவுவது அகதிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எத்தோப்பிய அகதியான Betelhem Tebubu ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அவரது இணைப்பு விசாவை புதுப்பிக்க வேண்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்பு, விசாவை புதுப்பிக்கச் சென்ற Betelhem Tebubu-வை 8 மணிநேரம் சிறைப்படுத்தியிருக்கின்றார். மீண்டும் விசா ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

“உங்கள் உணவை, தண்ணீரை, மருந்துகளை கொண்டு வாருங்கள். ஏனெனில் நாள் முழுவதும் நீங்கள் தடுத்து வைக்கப்படுவீர்கள்,” என ஒவ்வொரு முறை விசா புதுப்பிக்கும் போது குடிவரவுத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக Betelhem குறிப்பிட்டிருக்கிறார்.

“குடிவரவு அலுவலகத்தில் 8 மணிநேரம் நாங்கள் பூட்டி வைக்கப்பட்டோம். கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் கூட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் செல்ல வேண்டும்,” என்கிறார் Betelhem.

சொந்த நாடான எத்தோப்பியாவில் நிலவிய அரசியல் நிலையற்றத்தன்மை காரணமாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர், நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சுமார் ஓராண்டு காலம் இருந்திருக்கிறார்.

கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கிறார். பின்னர், இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா எனும் 6 மாத தற்காலிக விசா வழங்கப்பட்டு அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் வாழவும் பணியாற்றவும் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இது நிரந்தரமான அனுமதியல்ல.

இந்த விசாவே அண்மையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலிருந்து சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“நாங்கள் விடுவிக்கப்பட்டு விட்டோம். ஆனால் இணைப்பு விசா எனும் மிகப்பெரிய தடுப்பில் சிக்கியிருக்கிறோம். நான் சுதந்திரமாக நடக்கலாம், ஆனால் எனது சிந்தனை சுதந்திரமானதாக இல்லை,” என Betelhem கூறியிருப்பது இவ்விசாவின் தன்மையை சுட்டிக்காட்டுகின்றது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இவ்வாறான தற்காலிக இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது பெருங்கேள்வியைக் கொண்ட குழப்பமாகவே உள்ளது. அதே சமயம், சட்டவிரோதமான படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் வருபவர்கள் எவரும் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற கொள்கையை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.