ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார் அங்கிதா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஓபன் எரா (1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
நிருபமா மன்கட், நிருபமா வைத்தியநாதன், சானியா மிர்சா, ஷிகா ஓபராய் ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கனவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள்.