தமிழர் அடக்குமுறைநாள் பேரணி – மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடிய வேளையில் அதனை தமிழர் அடக்குமுறை நாள் என பிரகடனப்படுத்தி பல்லின மக்களின் ஆதரவுடன் போராட்டம் மெல்பெர்னில் இன்று நடைபெற்றது.

1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறப்பட்ட நிலையில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏனைய இனத்தவர் மீது வன்முறைகளை ஏவத்தொடங்கியது. எண்ணிலடங்கா அடக்குமுறைகளை பல்வேறு வழிகளில் மக்கள் மீது பிரயோகித்தது.

இதன் தொடர்ச்சியாக அண்மைய அதிபர் தேர்தலில் கோத்தபாய இராஜபக்சவின் வெற்றியின் பின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. மிக அண்மைய எடுத்துக்காட்டுக்களாக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டமை, குருந்துமலையிலிருந்த தமிழர் வழிபாட்டிடம் புத்தமதத்துக்குரிய இடமாகப் பிரகடனப்படுத்தப்பட எடுக்கப்படும் முயற்சிகள், கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் உடல்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நிலைமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றுக்கெதிராக தாயகத்தில் மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்திவருகிறார்கள். குறிப்பாக, சிறிலங்காவின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வேளையில் விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும், கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் உடல்கள் கட்டாயமாக எரிக்கப்படக்கூடாதென்றும் மற்றும் அவுஸ்திரேலிரேலிய அரசு இனப்படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து இப்பேரணி நடைபெற்றது.

இன்று 6-02.2021 அன்று சனிக்கிழமை மாலை 2 மணிக்கு State Library of Victoria என்ற இடத்தில் பேரணி ஆரம்பித்தது. இந்த பேரணியில் முஸ்லிம் சிங்கள சகோதரர்கள் உட்பட பலர் இணைந்துகொண்டனர். சிறப்பு பேச்சாளராக Australian Greens கட்சியின் மாநில தலைவர் சமாந்தா ரட்ணம், மானுஸ் தீவில் 8 வருடமாக தடுத்து வைக்கப்பட்டு வெளியான அகதி தனுஸ் செல்வராசா, தமிழ் அகதிகள் அவையைச் சேர்ந்த எம்மா டொக், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த வசந்தன் ஆனந்தராஜா உட்பட பலர் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச்செயற்பாட்டாளர் பரதன் தலைமை தாங்கினார்.

மக்கள் ஊர்வலமாக நீண்ட காலமாக அகதிகள் தடுத்து வைக்கப்படிருக்கும் Park Hotelக்கு சென்று மாலை நான்கு மணிக்கு நிகழ்வு நிறைவுபெற்றது.