யாழில் நான்கு நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தப் காவல் துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் துறை தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,வேலன் சுவாமிகள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல்,கொரோனா சுகாதார நடைமுறைகளைமீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் துறையால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.