1953க்கு பின்னர் அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

லிசா மொன்ட்கொமேரி 2014 இல் கர்ப்பணிப்பெண்ணொருவரை கொலை செய்த பின்னர் அவரது வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது.

கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த போதிலும் அவரது குழந்தை காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரிடம் இறுதி ஆசைகுறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மரணதண்டனையை நிறைவேற்றிய அனைவரும் அதற்காக வெட்கப்படவேண்டும் என மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மற்றும் மருட்சியடைந்த பெண்ணை கொலைசெய்யும் வேட்கையில் இந்த அரசாங்கம் தீவிரமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாகவும் பின்னர் நீதிபதியொருவரின் உத்தரவு காரணமாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பிற்போடப்படப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தது.

குறிப்பிட்ட பெண் பிறக்கும்போதே மூளை பாதிப்புடன் பிறந்தவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தகுதியற்ற உடல்நிலையை கொண்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

சிறுமியாகயிருந்தவேளை அவர் தொடர்ச்சியாக குடும்ப உறவினர்களால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டார் என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.