அஸ்வின் பதிலால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அஸ்வின் பேச்சால், சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ந்துவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானது வேறு எதுவுமில்லை எனலாம். சமையல் நிகழ்ச்சியுடன் இணைத்து காமெடி என்று இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு வித்தியாசமானது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் பிரபலமானவர் அஸ்வின். இன்றைய (ஜனவரி 10) நிகழ்ச்சி பொங்கல் கொண்டாட்டமாக இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தனக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்று ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அதில் அஸ்வின் குறித்துப் பேசும்போது, “அஸ்வின் ப்ரோ.. இன்ஸ்டாகிராமுக்குள்ள போனால் எல்லாப் பெண்களுமே உங்களுடைய புகைப்படத்தைத்தான் பதிவிடுகிறார்கள்” என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

அதற்கு உடனடியாக அஸ்வின் கூறியதாவது:

“உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. என்னுடைய கெரியர் தொடங்குவதற்கு நீங்கள் ஒரு பெரிய காரணம். கோயம்புத்தூரிலிருந்து யாருக்கும் தெரியாமல் வந்து, நான் சந்தித்த முதல் செலிபிரிட்டி நீங்கள்தான். ஒருவரை நம்பி வந்து ஏமாந்து, ஸ்கை வாக்கில் அமர்ந்திருந்தேன்.

‘குங்ஃபூ பாண்டே’ படம் பார்த்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த உங்களிடம் “சினிமாவுக்குள் நான் வரணும், ஓடி வந்துவிட்டேன், நீங்கள் ஒரு வழி சொல்லுங்கள்” என்றேன். அப்போது நீங்கள்தான் “சமூக வலைதளத்தில் இயக்குநர்கள் எல்லாம் ஆடிஷன்களுக்கு விளம்பரம் செய்வார்கள். அதைப் பாருங்கள்” என்றீர்கள்.

அங்கு ஆரம்பித்ததுதான். இங்கு வந்து நிற்கிறேன். உங்களோடு எடுத்த புகைப்படம் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்குக் காட்டுகிறேன்”.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவிட்டதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் 2011-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்துப் பதிவிட்டுள்ளார் அஸ்வின். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.